செவ்வாய், 26 ஆகஸ்ட், 2008

என் அறிவில் திணித்தது

மனத்திற்குக் கட்டளை

பேயா யுழலுஞ் சிறு மனமே
பேணா யென்சொல் இன்றுமுதல்
நீயா யொன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.

சென்றது மீளாது!

சென்றதினி மீளாதுமூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்¢டாம்.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவீர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.

புதன், 13 ஆகஸ்ட், 2008

என்னை நானே கேட்கின்றேன்...

உலகத்தை நோக்கி வினவுதல்

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,
நீங்களெல்லாம்
சொற்பனந்தானா? - பல
தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே,
நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? - உம்முள்
ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே, இளவெயிலே, மரச்செறிவே,
நீங்களெல்லாம்
கானலின் நீரோ? - வெறுங்
காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற்
புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ? - இந்த
ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே ஒருநினைவும்
காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ? - அங்குக்
குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம்
தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? - இதைச்
சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்த தெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே - நித்தம்
விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம்,
காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம் - இந்தக்
காட்சி நித்தியமாம்.